Sunday, April 4, 2010

செய்தி


யாழ்ப்பாண மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் அவர்கள் 03.04.2010 சனிக்கிழமை மாலை கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலை முன்றலில் நடைபெற்ற தமிழர் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் கலந்து உரையாற்றும் பொழுது பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார்.

எமக்கான அபிவிருத்தியைப் பேணுவதற்கும் எமக்கான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கும் எமக்குரிய தனித்துவமான தொன்மையான கலை, கலாசாரங்களை வளர்த்தெடுப்பதற்கு எமக்கு சட்டங்களை ஆக்கவல்ல அரசியல் பலம் தேவையாகவுள்ளது. மக்கள் இதனை உணர்ந்து தமிழர் தேசியக் கூட்டமைப்பை பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றம் அனுப்பி எதிர்வரும் ஆறு ஆண்டுகளில் இவற்றை அரசிடம் அடிபணியாது, உறுதியான முறையில் பெற்றுக் கொள்வதற்கு ஆணை தரவேண்டும் என்றார்.

“எமது 62வருடகால நியாயமான உரிமைப் போராட்டத்தை அரசியல் கோரிக்கைகளை ஆயுத வழியில் அமைந்த பயங்கரவாதப் போராட்டம் என்றார்கள். சர்வதேசங்களும் அதற்குத் தூபம் போட்டன. முதல் 30 ஆண்டுகளும் அறவழியில் தானே போராடினோம். காந்தியின் சத்தியாக்கிரகம் அறவழிப் போராட்ட வடிவம் தானே. தந்தை செல்வா தலைமையில் தமிழர் உரிமைக்காக போராடிய போது அரசு ஆயுத பலம் கொண்டு அடித்து, உதைத்து, மண்டையால் இரத்தம் சிந்தச் சிந்த விரட்டியது.
இந்த அநியாயத்தை கண்ணுற்ற இளைஞர்கள் ஆயுத பலத்தை ஆயுத பலத்தால்தான் அடக்க முடியுமென ஆயுதம் ஏந்தினார்கள். அவர்களை ஆயுதம் ஏந்த வைத்தது சிங்கள அரசு தானே … 30 ஆண்டுகள் தொடர்ந்த அந்த நியாயமான கோரிக்கைகளைக் கொண்ட போராட்டத்தை இந்தியா உட்பட 20க்கு மேற்பட்ட சர்வதேச நாடுகளின் நேரடி தலையீட்டையும் 80க்கு மேற்பட்ட நாடுகளின் மறைமுக ஆதரவையும் பெற்று கேவலமான யுத்த தர்மத்துக்கே இழுக்கான முறையில் கடந்த ஆண்டு மேமாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் அழித்தீர்கள். குழிகளை ஏலவே கிண்டிவைத்து விட்டு திட்டமிட்டு 40,000 பொதுமக்களை அப்பாவிகளான பெண்கள், குழந்தைகள் என்று பாராது கனரக ஆயுதங்களைப் பாவித்து கண்தெரியா இருட்டு நேரத்தில் கொன்று புதைத்துள்ளீர்கள். உங்கள் கரங்கள் இரத்தக் கறை படிந்தவை. சர்வதேசக் குற்றவாளிகள் நீங்கள். இதற்கு காலம் பதில் சொல்லும்.
இன்று 62 வருடமாக நாம் கோரி வந்த அதே நியாயத்திற்காக ஆழமான ஜனநாயக வழியில் நின்று குரல் கொடுக்கத்தான் பாராளுமன்றம் வருகின்றோம். உங்களுக்கு ஒத்துழைத்த சர்வதேச நாடுகளையும் சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஏனைய சர்வதேச நாடுகளையும் நோக்கி உரத்த குரலில் எமது நியாயத்தை எடுத்துரைத்து சிங்கள அரசின் திமிரை அடக்கி எமக்குரிய உரிமையை பெற்றுத் தாருங்கள் என அறைகூவல் விடவே பாராளுமன்றம் எமக்குத் தேவை என்கிறோம்.
நம் தனித்துவமான தேசிய இனம், எமக்கு பாரம்பரிய தாயகப் பிரதேசம் உண்டு, பாரம்பரியமாக அப்பிரதேசத்தில் எமக்குரிதான விவசாயத்தை, கடல்தொழிலைச் செய்து வாழும் உரிமை எமக்கு உண்டு. இங்கு தொன்மையாக வாழ்ந்து வரும் மக்களுக்குரிய இறைமையை இணைத்து சுய ஆட்சியை - சுயராஜ்ஜியத்தை கட்டி எழுப்பும் உரிமை எமக்கு உண்டு. அதனைப் பெற சகல வழிகளிலும் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடுவோம்.” என்று சூளுரைத்தார் பேராசிரியர்.

எமது வரலாற்று சிறப்பையும் பண்பாட்டையும் பேணும் இடத்தில் நான்கு நட்சத்திர ஹோட்டலா?




நல்லூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டப்படுவது எமது கலாசாரத்தை அவமதிக்கும் செயல் என யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் 30.03.2010 செவ்வாய்க்கிழமை நாவாந்துறை சனசமூக முன்றலில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தமக்கு ஆதரவு இல்லாத நிலையில், அரசாங்கம் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்கின்றோம் என்று கூறி வாக்கு பறிக்கும் வேலையை மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ரல் ஊடாக அவசர அவசரமாக 28.10.2010 ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றியுள்ளது.
'ஹோட்டல் நல்லூர்' என பெயரிட்டு நான்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கட்டுவதற்கான அத்திவாரக்கல் நாட்டும் விழாவை நடாத்தியுள்ளது. இவ் விழாவில்; மத்திய வங்கி ஆளுநர், அரச அதிபர் திரு.கே.கணேஷ; மற்றும் இராணுவ அதிகாரிகள் பங்கு கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.

நல்லூர் இராசதானியின் நினைவுச் சின்னங்களான சங்கிலியன் வளைவு, மந்திரிமனை, சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அருகில் நூறு யார் தூரத்தில் இந் நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்படவுள்ளமை யாழ் கலாசார சீரழிவின் அத்திவார இடுகை என யாழ்ப்பாணவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர். அநூராதபுரம் பொலனறுவையில் கலாசார முக்கோணங்களை அமைத்து தமது வரலாற்றுச் சின்னங்களைப் பேணிவருகின்ற சிங்கள அரசு இங்குள்ள கலாசார மையத்தில் நான்கு நட்சத்திர ஹோட்டல் கட்டுவது எமது கலாசாரச் சீரழிவுக்கான ஆரம்பம் என்பதை தமிழர்கள் புரியாமல் இல்லை. இவர்கள் ஹோட்டல் கட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் வேறு இடம் இல்லையா? கடற்கரைகள் சூழவுள்ள யாழ் குடாநாட்டில் பொருத்தமான இடத்தை தெரிந்திருக்கலாம் அல்லவா?

எமது இராசதானி அமைந்திருந்த ஆலயங்கள் அமைந்துள்ள நல்லூரில் ஏன் இக் ஹோட்டல்? நட்சத்திர ஹோட்டல்களில் என்ன நடக்கும் என்பதை நாம் அறியாதவர்கள் இல்லை. சூழல் பேண் சுற்றுலாத்துறையும் தங்குமிடங்களும் வளர்த்தெடுக்கப்படுதை நாம் எதிர்க்கவில்லை.ஆனால் இவர்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் எம் பண்பாட்டை நாசம் செய்கிறார்கள். இதனால் தான் நாம் எமக்கான அபிவருத்தியை நாமே மேற்கொள்ள வேண்டும் என்கிறோம் . நல்லூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டும் முயற்சியை யாழ் பொதுமக்கள் எதிர்க்கின்றார்கள். இதனை அரசாங்கத்தின் கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றோம் என தெரிவித்தார்.