Thursday, November 1, 2012

துணுக்காய் ‘மங்கை குடியிருப்பில்’ இருந்து விரட்டப்படும் யுத்தத்தால்; நலிவுற்ற மக்கள்!


சிந்தனைக்கூடம் – யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனத்தினதும் மாங்குளம் யுகசக்தி எனும் பெண்கள் அமைப்பினதும் ஏற்பாட்டில் மாங்குளம் யுகசக்தி கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (20.10.2012) அன்று ‘மக்கள் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும்’ எனும் தலைப்பில் முழுநாள் கருத்தரங்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாங்குளம், முத்தையன்கட்டு, முள்ளியவளை, மல்லாவி, துணுக்காய் ஆகிய
பிரதேசங்களிலிருந்து 60ற்கு மேற்பட்ட காணிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் வருகை தந்திருந்தனர்.
சிந்தனைக்கூடப் பணிப்பாளர் பேராசிரியர் இரா சிவசந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திரு. கே. குருநாதன் அவர்கள் வளவாளராகக் கலந்துகொண்டார். பொதுவாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமை சம்பந்தமான சட்டங்கள் பற்றிய விடயங்களைக் குறிப்பட்ட அவர், யாழ்ப்பாணப் பிரதேசங்களில் நிலவும் தேசவழமைச்சட்டத்தினூடான காணி உரிமைகள், வன்னியில் நிலவும் ‘பொமிற்’ காணி உரிமையினை கையாளும் விதங்கள் பற்றி விளக்கமளித்தார். பங்குபற்றுனர் தொடுத்த தனிப்பட்ட காணி தொடர்பான வினாக்களுக்கு சட்டரீதியான விளக்கங்களை வழங்கினார். இதில் மங்கை குடியிருப்பில் வாழ்வோரது பிரச்சினை முக்கியமாகப் பரிசீலனை செய்யப்பட்டது.